ரியா !மறைவான இணைவைப்பு? பெருமை அல்லாஹ்வுக்குள்ளது..தொடர் 18
‘ரியா” ஏற்படுவதற்கான அடிப்படைக் காரணம் இறை நம்பிக்கையில் (ஈமானில்) ஏற்படும் பலவீனம் ஆகும். அல்லாஹ்வின் மீது ஒரு மனிதனுக்கு உறுதியான நம்பிக்கையில்லா விட்டால், அல்லாஹ்வின் திருப்தியைப் பெறுவதை விட மக்களின் அபிமானத்தைப் பெறுவதே அவனுக்குப் பெரிதாகத் தோன்றும். ஈமானில் ஏற்படும் இந்த பலவீனத்தின் விளைவாக மறுமையில் கிடைக்கும் வெகுமதிகளையும், அருள் வளங்களையும் அவன் புறக்கணிக்கின்றான். இதே நேரத்தில், இந்த உலகில் கிடைக்கும் பெயருக்காகவும், புகழுக்காகவும் அவனது எண்ணம் அலை பாய்கின்றது. இத்தகைய எண்ணமே ‘ரியா”வில் அவனை வீழ்த்துகின்றது.
‘ரியா”விற்கு மூன்று அறிகுறிகள் உள்ளன. இந்த அறிகுறிகளைக் கண்டவுடன் இறை நம்பிக்கையாளர்கள் எச்சரிக்கையாகி , கவனமாக செயல்பட வேண்டும்.
1. புகழை விரும்புவது:-
நரகில் வீசப்படும், அறிஞர், வீரமரணமடைந்த தியாகி மற்றும் கொடையாளி தொடர்பாக நாம் முன்பு கண்ட நபிமொழியில் இந்த அறிகுறியைக் கவனிக்க முடிகின்றது. இந்த மூவரும், மக்களிடம் புகழ் பெற விரும்பினார்கள். அல்லாஹ்வின் திருப்தியை விட இந்தப் புகழை அவர்கள்பெரிதாக கருதினார்கள். மக்களிடம் புகழை எதிர்பார்க்கும் மனிதன் தன்னுள் பெருமைப்பட்டுக் கொள்கிறான். தான் புகழப்படத் தகுதியுடையவன் என்றும் அவன் கருதிக் கொள்கிறான். எனவே அவன் வீம்பும், தற்புகழ்ச்சியும் உடைய மனிதனாக உருவாகும் அபாயம் ஏற்படுகின்றது.
அண்ணல் நபி
அவர்கள் கூறியதாக அபூஹ{ரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அல்லாஹ் சொல்கிறான் ‘பெருமை என்னுடைய மேலாடையாகவும், பெரும் வல்லமை என்னுடைய அங்கியாகவும் உள்ளது. இந்த இரண்டில் ஏதாவது ஒன்றில் எவன் என்னுடன் போட்டியிடுகிறானோ, அவனை நான் நரக நெருப்பில் வீசுவேன்” நூல்கள்: அபுதாவூத், இப்னுமாஜா, அஹ்மத்
தற்பெருமை கொண்ட ஒரு மனிதரைப் பற்றி அல்லாஹ்வின் தூதர்; பின்வருமாறு எச்சரித்ததாக இன்னொரு நபிமொழியில் அபூஹுரைரா (ரலி) அவர்கள் எச்சரிக்கிறார்கள்.
அழிவை ஏற்படுத்தக்கூடிய விஷயங்கள் மூன்று உள்ளன. மன இச்சையைப் பின்பற்றுதல், பேராசைக்கு அடிபணிதல் மற்றும் தற்பெருமையும், இறுமாப்பும். இது (கடைசியாகச் சொன்னது) தான் மூன்றிலும் மிக மோசமானதாகும். நூல்: மிஷ்காத் அல் மசாபிஹ்
கிறிஸ்தவர்கள், யூதர்களைப் பற்றி திருக்குர்ஆன் பின்வருமாறு எச்சரிக்கிறது.
தாங்கள் செய்தவற்றுக்காக மகிழ்ச்சியடைந்து தாம் செய்யாதவற்றுக்காகப் புகழப்பட வேண்டுமென விரும்புவோர் தண்டனையிலிருந்து தப்பித்து விட்டார்கள் என்று (முஹம்மதே!) நீர் நினைக்காதே! அவர்களுக்குத் துன்புறுத்தும் தண்டனை உள்ளது. (திருக்குர்ஆன் 3:188)
இதனால் தான், நபித்தோழர்கள், புகழப்படக்கூடிய சூழலில் கூட சிக்கிக் கொள்ளக் கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருந்தார்கள்.
அப்துர்ரஹ்மான் லைலீ (இவர் இரண்டாம் கலீபா உமர் (ரலி) காலத்தில் பிறந்தவர். அலீ (ரலி), உபைபின் கஅப் மற்றும் பல நபித்தோழர்களிடமிருந்து ஹதீஸ்களைக் கேட்டு அறிவித்தவர்) அறிவிக்கிறார்கள்.
‘அன்சார்களாக இருந்த நூற்றி இருபத்திற்கும் மேற்பட்ட நபித்தோழர்களை நான் சந்தித்துள்ளேன். அவர்களிடம் யாராவது வந்து மார்க்கத் தீர்ப்பு கேட்டால், வேறு யாராவது தனக்காக இந்தத் தீர்பை வழங்க மாட்டாரா? என்று விரும்புகிறவர்களாக அவர்கள் இருந்தனர்”
ஆதார நூல்: அத்தாரிமி
மார்க்கத்தைப் பற்றி தவறுதலாக சொல்லி விடக் கூடாது என்பதற்காகவும் அவர்கள் தயக்கம் காட்டுபவர்களாக இருந்தனர்.
Related Posts
Subscribe
You can subscribe to தமிழ் நிருபர் by e-mail address to receive news and upates directly in your inbox. Simply enter your e-mail below and click Sign Up!


